Breaking News
அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றது

திண்டுக்கல்: அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புகழ், திருமுறைகள் ஒலிக்க, தமிழில் வேத மந்திரகள் முழங்க தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பழனி மலைக் கோயில் ராஜகோபுரம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

குடமுழுக்கை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பழனி மலைக் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு செல்ல 30 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, உள்ளிட்டோர் ஆகியோர் பங்கேற்றனர். விழா முடிந்த பின்னர் 11 மணிக்கு மேல் வழக்கம் போல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.