Breaking News
எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை மும்பையில் மட்டுமே நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாக தகவல்

மும்பை,

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. தொடக்கத்தில் சென்னை, மும்பையில் நடந்த இந்த ஆட்டம் தற்போது டெல்லி, ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 30-வது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருந்தன.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று உறுதியானது.

இதனால் நேற்று இரவு ஆமதாபாத்தில் நடக்க இருந்த கொல்கத்தா-பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் பிற்பகலில் அறிவித்தது. இந்த ஆட்டம் மற்றொரு தேதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கான மாற்று தேதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. நல்லவேளையாக அணி வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

கொரோனா பாதிப்பை சந்தித்து இருக்கும் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது.

இதேபோல் கொல்கத்தா அணியுடன் கடைசியாக மோதிய டெல்லி அணியின் வீரர்கள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்துவது பற்றி பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் 3 மைதானங்கள் இருப்பதால் அங்கு போட்டிகளை நடத்துவது பற்றி பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசிப்பதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்கள் தங்குவதற்காக பயோ பாதுகாப்பு வளையத்தை உருவாக்குமாறு ஓட்டல் நிர்வாகங்களை பிசிசிஐ கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.