Breaking News
சுரைக்காய்

கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு மருந்தாகும்.சுரைக்காய் Cucurbitaceae எனும் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். Lagenaria siceraria என்பது சுரைக்காயின் தாவரப் பெயர் ஆகும். இது இந்தியா முழுமையிலும் பயிராவது. சுரைக்காயில் இரண்டு வகைகள் உண்டு.‘இனிப்புச் சுரை’ அல்லது ‘காட்டுச் சுரை’ என்றும் பிரித்துப் பார்ப்பது வழக்கம். கசப்பிலாச் சுரைக்கு Sweet bottle gourd என்று ஆங்கிலத்தில் பெயர். கசப்புச் சுவையுடைய காட்டுச் சுரைக்கு Bitter bottle gourd என்று பெயர். வட மொழியில் சுரைக்கு ‘தும்பினி’, ‘பிண்டபலா’ என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பர். காட்டுச் சுரையை வடமொழியில் ‘கடுதும்பி’ என்று குறிப்பது உண்டு.

சுரைக்காயை ஆசியா கண்டத்தில் உள்ள மக்கள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அறிந்து அதைப் பயன்படுத்தி வருவதாக வரலாறு கூறுகிறது. சுரையை கறிச்சுரை என்றும் குறிப்பதுண்டு.பொதுவாக கசப்பில்லாத சுரையே கறியாக சமைப்பதற்குப் பயன்படும். சுரைக்கொடியை மழைக்காலங்களில் வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைப் பகுதியிலும் பயிராக வளர்ப்பது வழக்கம். கிராமப்புறக் கூரைகளின்மேல் இதைப் படரவிட்டு வளர்ப்பதை நாம் இன்றும் பார்க்கலாம்.சுரைக்காய் ஒரு குடத்தைப் போல உருண்டை வடிவுடையதாயும், பருமனாகவும், பளபளப்பாகவும். மேல் தோல் மிகவும் மிருதுவானதாகவும் இருக்கும். உட்பகுதியில் மிக்க சதைப்பற்றோடு விதைகள் வெண்மையாகவும் காணப்படும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது. இது சீதளத்தை உண்டாக்க வல்லது. சுரைக்கொடியின் கீரையைக் கூட சமைத்து(கடைந்து) உபயோகப்படுத்துவது உண்டு.

நன்கு முற்றிய சுரைக்காைய ஒரு துைளயிட்டு உள்ளிருக்கும் சதைப் பகுதியை நீக்கிவிட்டு ‘சுரைக் குடுக்கை’ என்ற பேரில் ஒரு பாத்திரம் போல் திட, திரவ பண்டங்களை வைப்பதற்காக இன்றும் பயன்படுத்துகின்றனர்.சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது.உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறுநீரைப் பெருக்கக்கூடிய சிறந்த உணவுப் பொருள். உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. பூசணிக்காயை அல்வா என்னும் இனிப்புப் பண்டம் செய்வதுபோல சுரைக்காயையும் துருவி இனிப்பான அல்வா செய்யப் பன்படுத்தலாம்.வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும், கொப்புளங்களை ஆற்றவும் இதை நசுக்கி மேற்பற்றாகப் பயன்படுத்துவர். சுரைக்கொடியின் இலைத் தீநீர் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தருவதுண்டு. சுரை இலையினால் நீர்க்கோர்வை, உடல் வீக்கம், முத்தோஷம்(வாத, பித்த, சிலேத்தும் குற்றங்கள்) போகும். சுரையின் இலை மலத்தை இளக்கவல்லது என்பதால் மலச்சிக்கல் உடையவர்கள் இதைக் கீரையாகக் கடைந்து சாப்பிடலாம். இது சீரணத்தையும் துரிதப்படுத்தவல்லது. சுரைக்கு பைத்தியத்தைத் தணிவிக்கும் தன்மையும் உண்டு.

சுரைக்காய் பற்றிய அகத்தியர் பாடல்:
‘நீரிழியும் வீக்கம்போம் நேரே மலமிறங்கும்
பாரமுறு சோபை பறக்குங்காண் – தீராத்
திரிதோடம் போகுஞ் செறிந்த சுரையின்
உரிய கொழுந்திலையை உண்’
– அகத்தியர் குணபாடம்

பசுமையான சுரைக்காயின் கொழுந்து இலைகளைக் கொய்து சுத்தம் செய்து கீரை போலக் கடைந்து உண்பதால் சிறுநீர் நன்றாக வெளியேறும், உடலில் நீர் தேங்கியதால் ஏற்பட்ட வீக்கம் வற்றிப் போகும். மலச்சிக்கல் உடைந்து எளிதாக மலம் இறங்கும். உடலுக்குத் துன்பத்தைத் தருகிற சோகை நோய் சொல்லாமற் கொள்ளாமற் பறந்தோடும்.உடலைத் துன்புறுத்துகிற வாத, பித்த, சிலேத்துமக் கோளாறுகள் நீக்கிச் சமநிலை உண்டாகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.சுரைக்காயைப் பற்றிய மற்றொரு அகத்தியர் பாடலையும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

‘வாத பித்தம் வாயருசி வன்பீலி கஞ்சீதம்
ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம் – ஓதத்
திருப்பாற் கடற்றிருவே! தீக்குணத்தை மேவுக்
சுரைக்காயைத் தின்பவர்க்குச் சொல்’
– அகத்தியர் குணபாடம்.
சுரைக்காயை உண்பதினால் வாதம்,

பித்தம், வாய்ச் சுவையின்மை இவை போகும். ஆனால் சீதளமுடையைவர்கள் இதை உண்பதால் ஈரல் நோய்கள், மார்பு நோய்கள் உண்டாகக் கூடும் என்றும் உள்ளெழுந்த அனலைத் தணிக்க வல்லது என்பதால் உஷ்ண தேகம் கொண்டவர்களுக்கு மிகவும் உகர்ந்தது என்றும் மேற்கூறிய பாடல் ெதரியப்படுத்துகிறது. இன்னொரு பாடலில் சுரையினது தண்டு பித்தத்தைப் போக்க வல்லது. வெறிநோய்களை விலக்க வல்லது என்றும் தெரிவிக்கிறது.சுரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்:புதிதாக எடுக்கப்பட்ட 100 கிராம் சுரைக்காயில் கீழ் வரும் சத்துக்கள் அடங்கியுள்ளதாக அமெரிக்கத் தாவரவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.எரிசக்தி (எனர்ஜி) – 14 கலோரி, மாவுச்சத்து – 3.39 கிராம், புரதச்சத்து – 0.62 கிராம், கொழுப்புச்சத்து – 0.02 கிராம், நார்ச்சத்து – 0.05 கிராம், வைட்டமின்களான ‘போலிக் அமிலம்’ 6 மைக்ரோகிராம், ‘நியாசின்’ 0.320 மி.கிராம், பேண்டோதெனிக் அமிலம் 0.152 மி.கிராம் பைரிடாக்ஸின் 0.040 மி.கிராம், ரிபோஃப்ளேவின் 0.0220 மி.கிராம், தயாமின் 0.029 மி.கிராம், வைட்டமின் ஏ – 16 IU., வைட்டமின் ‘சி’ 10.1 மி.கி. மற்றும் நீர்ச்சத்துக்களான சோடியம் – 2 மி.கி, பொட்டாசியம் – 150 மி.கி., தாது உப்புக்களான சுண்ணாம்புச்சத்து – 26 மி.கி.,தாமிரம் (காப்பர்) – 0.034 மி.கி., இரும்புச்சத்து – 0.20 மி.கி, மக்னீசியம் – 11 மி.கி., மேங்கனீசு – 0.089 மி.கி., பாஸ்பரஸ் – 13 மி.கி., செலினியம் – 0.2 மி.கி., துத்தநாகம்(ஸிங்க்) – 0.70 மி.கி. அடங்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.மேற்கண்டபடி பல்வேறு மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கி உள்ளதால் சுரைக்காய் ஓர் அருமையான மருந்தாக விளங்குகிறது.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:

*சுரைக்காய் தன்னுள் 96% நீர்ச்சத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகிறது. சுரைக்காய்ச்சாறு வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பி’ வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘சி’, சோடியம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்களையும் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக்கூடிய, சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகிறது.

*ஒரு கப் சுரைக்காய்ச் சாற்றில் 1.8 மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உட்சுரப்பிகள்(ஹார்மோன்கள்) ஒழுங்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகிறது.

*உடல் பருமன் கொண்டவர்கள் சுரைக்காய்ச்சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல் எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர்.

*‘பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் செறிந்த சுரைக்காய்ச்சாறு ஒரு ஊட்டச் சத்து மிகுந்த உணவு மட்டுமின்றி பசியை அடக்கித் தேவையின்றி உணவு உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்யவும் உதவுகிறது.

*சுரைக்காய் தன்னுள் கரையக்கூடிய மற்றும் கரையா நார்ச்சத்துக்களை அபரிமிதமாகப் பெற்றுள்ளது. இது உணவாகும்போது சீரண உறுப்புகளுக்குப் பலம் தந்து அவற்றைச் செம்மைப்படுத்தி மலச்சிக்கலை மறையச் செய்கிறது.

*மலச்சிக்கல் இல்லாதபோது இயற்கையாகவே வயிற்றில் அமிலம் சேர்ந்து புண் ஆகுதல், வயிற்றில் காற்று சேர்ந்து வயிற்றை அடைத்ததுபோல் தோன்றுதல் ஆகிய பிரச்னை கள் சுரையை உண்பதால் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லாதபோது ஆசனவாய்ப்புற்று வருவதும் அறவே தடுத்து நிறுத்தப்படுகிறது.

*சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால்தர்ப்பூசணி சாறு போல் கோடைக்கால வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. உடலிலிருந்து ெவளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்து குறையை ஈடுகட்டுவதாகவும் உள்ளது.

*சுரைக்காய் சிறுநீற்றைப் பெருக்கவல்லது. சுரைக்காய்ச்சாறு உடலில் தேங்கிய நீரை வெளித்தள்ளி வீக்கத்தையும் கரைக்க உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் துணையாய் நிற்கிறது.

*சுரைக்காய் லோசான உறக்கத்தை வருவிப்பதாகவும் அமைகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி ஆகியன தவிர்க்கப்படுகின்றன.

*அதிகமான வியர்வை, சோர்வு, மயக்கம், பேதி என ஏதேனும் ஓர் துன்பம் உற்றபோது ஒரு கப் சுரைக்காய் சாறு உடனடித் தீர்வாக உதவுகிறது. இழந்த நீர்ச்சத்ைத சமன்படுத்துகிறது.

*சுரைக்காய்ச் சாறு பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம்.சுரைக்காய்ச் சாறு தயாரிக்கும் முறை : சுமார் 300 கிராம் எடையுள்ள ஒரு சுரைக்காயை எடுத்துக் கொள்ளவும். முற்றாத, பழுக்காததாக இருப்பது நல்லது. மேற்புறத்தை நீர்விட்டு சுத்திகரித்துக் கொள்ளவும். பிறகு, ேமற்தோலை சீவி நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக்கி, அதனுடன் 6 புதினா இலைகளைச் சேர்த்து மிக்ஸியில் இட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனோடு சிறிது சீரகப்பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குளிர்விக்கும் பொருட்டு ஐஸ்கட்டிகள் சிலவற்றையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். சுரைக்காய்ச் சாறு இப்போது பருகத்தக்கதாக இருக்கும்.
சுரைக்காய் மருந்தாகும் விதம்:

*சுரைக்காய்ச்சாறு பசுமையாக எடுத்து அன்றாடம் குடித்து வருவதால் உடல் எடை குறைவதோடு மார்பகத்தைப் பற்றிய நோய்கள் பலவும் மறைந்துவிடும்.

*சுரை இலையைச் சாறாக்கிக் குடிப்பதாலோ அல்லது தீநீரிட்டு சர்க்கரை சேர்த்துக் குடிப்பதாலோ வாந்தியை உண்டாக்குவதற்கும், மஞ்சள் காமாலை நோயைப் போக்கூதற்கும், ஈரல் வீக்கத்தை வற்ற வைப்பதற்கும் பயன் தருவதாக அமையும்.

*சுரை இலையை மைய அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்துவிடுவதால் தலை வழுக்கை தவிர்க்கப்படுவதோடு தலை முடியும் வளரும், தலை வலியும் தணியும்.

*சுரை விதைகளைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு ஐந்து கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்ந்தோ அல்லது நீரிலிட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்தோ குடிப்பதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிப் போகும்.

*சுரைக்காய்ச் சாறு ‘அல்சர்’ என்னும் வயிற்றுப் புண்ணை ஆறச் செய்வதோடு அமிலச் சுரப்பை அடக்கிவைத்து செரிமானத்தைத் தூண்டிவிடும்.

*சுரைக்காயை நசுக்கிப் பசையாக்கி மேற்பற்றாகப் போடுவதனால் தீக்கொப்புளங்கள், நீர்க்கோர்த்து நோகச் செய்யும் கொப்புளங்கள் வந்த வடு தெரியாமல் விலகிவிடும்.

*கோடைக்கால வெப்பத்தால் உண்டான தலைவலிக்கு சுரைக்காயை அரைத்து நெற்றிப் பத்தாகப் போட்டு வைக்க குணமாகும்.

*சுரைக்கீரையோடு பூண்டு சேர்த்து ஒரு மண்டலம் சமைத்து சாப்பிட்டுவர நீரேற்றம் (Dropsy) கரைந்து போகும்.

சுரைக்காய் விலை மலிவானது உன்னத மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. உஷ்ணத்தைத் தணிப்பது. உடல் எடையைக் குறைப்பது. சிறுநீரகம், இரையறை, இதயம் இவற்றுக்கு பலம் சேர்ப்பது கொப்புளங்களை குணப்படுத்துவது, தலைவலியைத் தணிப்பது, புத்துணர்வைத் தருவது எனத் தெரிந்து கொண்டோம். சீதள உடல்வாகு உள்ளவர்கள் தவிர அனைவர்க்கும் இது உகந்தது என உணர்ந்து பயன்படுத்த உய்வோம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.